Monday, April 9, 2012

மட்டன் பிரியாணி - அலுமினியம் ஃபாயில் தம் வைத்தது

தேவையான பொருட்கள்:

மட்டன் - 300 கிராம்
பிரியாணி அரிசி / பாசுமதி அரிசி / சீரகச் சம்பா அரிசி - 1 1/2 கோப்பை
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய் புதினா - 3 கைப்பிடி
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 கைப்பிடி
மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- 1/4 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி அல்லது எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 4-5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - 4 துண்டுகள்
கிராம்பு - 4
இலை - 3
அன்னாசி மொக்கு - 1

மட்டனில் உள்ள கொழுப்பை அகற்றும் முறை:

நம் ஊரிலாவது கொழுப்பில்லாத கறி வாங்கி விடலாம். ஆனால், இங்கே ரியாத்தில் கொழுப்பில்லாத கறி கிடைப்பது அபூர்வம். அப்படிக் குறைவாகவே கொழுப்பு இருந்தாலும் கூட, அதை நீக்குவது அவசியம் என்பவர்களுக்காக இந்தக் குறிப்பு. மற்றபடி கொழுப்பு தேவைப்பட்டால், அப்படியே கழுவி எடுத்துக் கொள்ளலாம்.
  • கறித்துண்டுகளை நடுத்தர அளவில் துண்டுகளாக்கவும்.
  • 2 மேசைக்கரண்டி கோதுமை மாவு, 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி சுமார் அரை மணி நேரம் வைக்கவும்.
  • பின் கழுவியெடுத்தால் கொழுப்பு தனியாகக் கழன்று வந்து விடும்.



(கோழியையும் இப்படி மஞ்சள் & மாவால் குளிப்பாட்டி எடுத்தால், கொழுப்பும் கழன்று வரும்; பச்சை வாசமும் மறைந்து போகும்.)

தாளிக்க &  வதக்க:
  • வாணலியில் வெண்ணெய் சேர்த்து, அது உருக ஆரம்பித்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
  • தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும்.
  • பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வரும்போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வர வதக்கவும்.
  • நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், சிறு துண்டுகளாக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும், வாணலியைக் கொஞ்சம் நேரம் மூடி வைத்தால் தக்காளி குழைந்து விடும்.
  • பின் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலாப்ப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறவும்
  • எண்ணெய் பிரிந்து வரும்போது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
  • தட்டி வைத்த சின்ன வெங்காயமும் போட்டு வதக்கவும்
    ஒவ்வொரு பொருள் சேர்ப்பதற்கு முன்னும் எண்ணெய் பிரிந்து வருவதுதான் பிரியாணிக்கான முக்கிய குறிப்பு.


    குக்கரில் வேக வைக்கும் முறை:
    • வதக்கிய மசாலாவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும்.
    • ஒரு பகுதியை அப்படியே வைத்துவிட்டு, மறு பகுதியை நீர் வடிகட்டிய மட்டன் துண்டுகளுடன், மட்டனுக்கு மட்டும் தேவைப்படும் உப்பு சேர்த்து, தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, மட்டன் முக்கால் பத வேக்காடு வரும் வரை வேகவைக்கவும்.
    • (பிரியாணி இலைகளை குக்கரில் சேர்க்காமல் தனியே எடுத்து வைத்துள்ள மசாலாவில் சேர்க்கவும்.)
    • வெந்த, குக்கர் ஆவி அடங்கியதும், மட்டன் துண்டுகளைத் தனியே வடிகட்டி எடுக்கவும்.
    • எஞ்சியுள்ள தண்ணீரைச் சரியாக அளந்து கொள்ளவும்.
    அரிசி கழுவி வைக்கும் முறை:
    • அரிசியை நீரில் கழுவி, வடிகட்டி, சுமார் 5 நிமிடங்கள் வைக்கவும்.
    தம் வைக்கும் முறை:
    • அடி கனமான பாத்திரத்தில் (நான் ஸ்டிக் பாத்திரமும் உகந்ததே) 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வடித்து வைத்து அரிசியைச் சுமார் 1 நிமிடம் வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
    • பின் மட்டனில் வடிகட்டிய நீருடன் சேர்த்து 3 கோப்பை நீர் அளந்து பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
    • கொதி நன்கு வந்ததும், அரிசி, வெந்த மட்டன் மற்றும் மீதமிருக்கும் மசாலா சேர்த்துக் கிளறவும்.
    • தேவையான உப்பு சேர்க்கவும்.
    • தயிர் அல்லது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்துக் கிளறவும்.
    • தண்ணீர் பாதியளவு வற்றிவிடும் நிலையில், அலுமினியம் ஃபாயில் போட்டு வைத்து, மூடி கொண்டு மூடி வைக்கவும். (இது எரியும் கரித்துண்டுகள் வைத்திடாத  தம்.)




    • தேவைப்பட்டால் அலுமினியம் ஃபாயிலை எடுத்து, நடுவில் கிளறிப் பின் மறுபடியும் மூடி தம் வைக்கலாம்.
    • சுமார் 7 - 10 நிமிடங்களில் பிரியாணி தயாராகிவிடும்.

    குறிப்பு:

    • ஏலக்காய் வாசனை விரும்புபவர்கள், தாளிக்கையில் சேர்த்துக் கொள்ளலாம்.
    • இதில் கூறப்பட்டுள்ளது மிதமான காரம்; தேவைப்பட்டால் பச்சை மிளகாய் மற்றும் மிளகாய்ப்பொடி இன்னும் சேர்த்துக் கொள்ளலாம்.
    கற்றுக் கொடுத்தது: பலரிடமிருந்து நான் கற்ற, ஒவ்வொருவரிடமும் ஒன்றைப் பின்பற்றிய முஷக்கல் குறிப்பு

    9 comments:

    Radha rani said...

    மட்டனில் கொழுப்பை அகற்றும் முறை பயனுள்ள குறிப்பு.இதுவரை கேள்விப்பட்டதில்லை.இனி இம்முறையை பின்பற்றுகிறேன்..பிரியாணி நல்லா இருக்கு..இதே முறையில் தேங்காய் பால் சேர்த்து நான் செய்வதுண்டு.

    Asiya Omar said...

    அருமையாக செய்து காட்டி இருக்கீங்க.அதென்ன முஷக்கல் குறிப்பு.வார்த்தை இப்ப தான் கேள்விப்படுறேன்.

    Packya said...

    பிரியாணி அசத்தலா இருக்கு.. உங்க குறிப்பை ரொம்ப நாட்களாக பார்த்து செய்தும் வருகிறேன். எல்லாமே சுவையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பாச மலர் / Paasa Malar said...

    வாங்க ராதாராணி....தேங்காய்ப்பால் எப்போதாவது சேர்ப்பதுண்டு..

    பாச மலர் / Paasa Malar said...

    வாங்க ஆசியா..அது அரபி வார்த்தை என்றுதான் நினைக்கிறேன்...இங்கே Mama Noura என்னும் ஷவர்மா கடையொன்றில் அனைத்து பழங்களின் கலவைச்சாறு மிகவும் பிரபலம்.....அந்த cocktail ஐ முஷக்கல் என்று கூறுவார்கள்..பல குறிப்புகளின் கலவை என்பதால் இப்படி எழுதினேன்..cocktail குறிப்பு

    பாச மலர் / Paasa Malar said...

    வாங்க பாக்கியா..மிக்க நன்றி..உங்கள் வீட்டுக்கும் வந்து பார்த்தேன் மட்டன் பிரியாணிதான் போலிருக்கிறது..நல்ல அசத்தலான குறிப்புகள் கண்டேன்..

    ராஜ நடராஜன் said...

    ரொம்ப அக்கறையாக சமையல் குறிப்பு சொல்றீங்க என்பது உங்கள் பிரித்து பிரித்து சொல்லும் பக்குவத்திலேயே தெரிகிறது.

    கொழுப்பு பிரிக்கும் முறை உண்மையில் பெரும்பாலோர் அறியாத முறை எனலாம்.

    அலுமினியம் பாயில் கிடைக்காவிட்டால் பாத்திரத்தின் மூடியை சுற்றி மைதா மாவை சப்பாத்தி பத நிலையில் ஒட்ட வைத்தும் சமைக்கலாம்.

    பகிர்வுக்கு நன்றி.

    பாச மலர் / Paasa Malar said...

    வாங்க ராஜ நடராஜன்...மிக்க நன்றி..உங்க தம் குறிப்பும் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்யமுடியும்..நல்ல குறிப்பு..

    ஸாதிகா said...

    இப்படி காற்றுப்புகாவண்ணம் பாயில் பேப்பரால் மூடினால் அடிகூட பிடிக்காது.அருமையாக செய்துகாட்டி இருக்கீங்க பாசமலர்.

    Post a Comment