சமையல் என்ன பெரிய விஷயமா? செய்ய ஆரம்பிக்கும் வரை அப்படித்தான் தெரிந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது. ஆனால் போகப்போக மிகவும் இலகுவான ஒரு செயலாகிவிட்டது. புரியாத வரை புதிராக இருந்து புரிந்தவுடன் இவ்வளவுதானா என்றாகிவிடுகிற சில விஷயங்களுள் சமையலும் அடங்கும் என்று ஆரம்பத்தில் புரியவில்லை.
போகப்போகப் புரிந்தது. 0-9 வரை எண்களை வித விதமாக மாற்றியமைத்து பல புதிய எண்கள் உருவாக்குவது போல், அதை இப்படி ...இதை அப்படி..என்று மாற்றி மாற்றி முயற்சி செய்தால் சமையலும் சுலபமான ஒரு சவால்தான்.
கல்யாணம் முடிந்து, வழியனுப்பு படலம் முடிந்து, புகுந்த வீடு வரும் வரை சற்றே இது குறித்தும் கவலைப்பட்டதில்லை. திடீரென்று ஓடி வந்த பயமும் 'பயப்பாடாதே. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை' என்று அனைவரும் கூறியதும் சற்றே பம்மிக் கொள்ள எப்போது யாரோ ஒருவர் தயவில் வயிறு வளர்த்தே பழகிப்போனது. தனியாய் குடித்தனம் வந்த போதுதான் சமையல் பெரிய விஷயம் என்று தோன்ற ஆரம்பித்தது. இப்போது அந்தப் பயமெல்லாம் போன இடம் தெரியவில்லை.
வாய்க்கு ருசி என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அனைவருக்கும் சமையலில் மையல் இல்லாமல் போகாது. பிடிக்காமல் செய்ய ஆரம்பித்த விஷயம். இன்றளவும் பெரிதாக ஆர்வமில்லாத ஒரு விஷயம். இருந்தாலும் எனக்குத் தெரிந்ததைப் பதிய வேண்டுமென்றா ஆர்வம். பின்னொரு நாளில், என் மகளுக்கோ, பேத்திக்கோ ஏன் பேரனுக்கோ கூட உபயோகப்படும் என்று நியாயமான / அநியாயமான ஒரு நம்பிக்கை. நான் பட்ட அவஸ்தை அவர்களும் படக்கூடாது என்பதற்காக....ஏதாவது ஒரு சமையற்குறிப்பு கைவசம் இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்குமே என்பதற்காகவும், எனக்குத் தெரிந்ததை, நான் அங்கே இங்கே கற்று முயல்வதைப் பதியும் நோக்கமாகவே இந்த வலைப்பூ.
Sunday, March 21, 2010
Subscribe to:
Posts (Atom)