Tuesday, October 16, 2012

சிவப்பு அரிசி இனிப்புப் புட்டு

தேவையான பொருட்கள்:

சிவப்புப் புட்டு அரிசி மாவு - 1/2 கோப்பை
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - சீனி - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • புட்டு மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு உப்புக் கலந்த நீரைத் தெளித்துக் கட்டி தட்டாமல் பிசறிக் கொள்ளவும்.

  • பின் புட்டுப் பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் மாவு, பின் தேங்காய் என்று மாறி மாறிப் பரப்பவும்.






  • புட்டுப் பாத்திரத்தை மூடி, குக்கரில் வெய்ட் வைக்கும் இடத்தில் பொறுத்தவும்.
  • 5 நிமிடங்கள் நல்ல ஆவியில் வெந்ததும், இறக்கவும்.
  • அகலமான பாதிரத்தில், புட்டை இட்டு, அதனுடன், சர்க்கரை, நெய், சேர்த்துக் கிளறவும்.

  • மீண்டும் புட்டுப் பாத்திரத்தில் சற்றே இறுக்கமாக அழுத்தி வைத்து, ஒரு தட்டில் கவிழ்க்கவும்.

குறிப்பு:
  • வெள்ளை அரிசிப் புட்டுக்கும் இதே குறிப்புதான்.
  • தேவைப்படுமானால், ஏலக்காய்ப் பொடி, பொடித்த முந்திரி சேர்த்துக் கொள்ளலாம்.
  • குழாய்ப் புட்டு போலவே, தேங்காய்ச் சிரட்டையில் புட்டு செய்வதும் கேரள உணவின் சிறப்பம்சம். தேங்காய்ச் சிரட்டைக்குப் பதிலாக இப்பாத்திரம்.
  • வாழைப்பழத் துண்டுகள் சேர்த்துச் சாப்பிட்டால் அலாதி ருசி தரும்.
  • நெய் சேர்க்காமல், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிடாய் தொந்தரவுகள், இடுப்பு வலி உள்ளவர்கள், வயதுக்கு வந்த பெண்கள் முதலியோர்க்கு சக்தி தரும் உணவாகும் இது.
 

வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 1/2 கோப்பை
பாசிப்பருப்பு - 1/2 கோப்பை
மிளகு - 4 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 3 தேக்கரண்டி
நெய் - 1/2 கோப்பை
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • அரிசியைக் கழுவியபின், 6 கோப்பை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
  • பாசிப்பருப்பை வறுத்து, பெருங்காயம் சேர்த்து, சுமார் 10 நிமிடம் வேகவைக்கவும்.
  • அரிசி உருமாறிச் சாதம் ஆகத் தொடங்கும்போது பாசிப்பருப்பு, உப்பு சேர்க்கவும்.
  • துருவிய இஞ்சியில் 1 தேக்கரண்டி அரிசி, பருப்புடன் சேர்க்கவும்.
  • தீயைச் சிறிதாக வைத்து, மூடிவைத்து, அவ்வப்போது கிளறவும்.
  • தண்ணீர் அளவு குறைந்து, பொங்கல் முக்கால் பதத்தில் இருக்கும் போது, வாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு, சூடானதும், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம், மீதமிருக்கும் இஞ்சித்துறுவல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரிசி பருப்புடன் சேர்த்துக் கிளறவும்.
  • நன்கு குழைந்து வெந்ததும், மீதமிருக்கும் நெய்யை ஊற்றிக் கிளறி, 2 அல்லது 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்துப் பின் இறக்கவும்.
  • நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

குறிப்பு:
  • குக்கரில் வைக்கும்போது எல்லாவற்றையும் ஒரே நேரத்திலேயே வைத்து விடலாம்...தாளிப்பைத் தவிர...
  • குக்கரில் செய்வதை விட இந்த ருசி சிறப்பாக இருக்கும். அளவும் அதிகமாக வரும்.
  • காரம் சற்று அதிகமாக வேண்டுமென்றால், பச்சை மிளகாய் (அரிசி வேகும்போது) சேர்த்துக்கொள்ளலாம்.
  • அக்மார்க் ருசிக்கு இவ்வளவு நெய் தேவை..மற்றபடி ஆரோக்கியம் கருத்தில் கொண்டு குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்..

Tuesday, May 1, 2012

பாசிப்பருப்பு சாம்பார் (இட்லிக்கானது)

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு- 1 கோப்பை
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பொடிக்க:

வற்றல் மிளகாய் - 3
கொத்தமல்லி விதை - 3 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய், கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், வற்றல் மிளகாய் - 1, பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:
  • பாசிப்பருப்பை, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • பொடிக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  • தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் பாசிப்பருப்பு, தண்ணீர், பொடித்த பொருட்கள் சேர்த்துக் கிளறிக் கொதிக்க விடவும்.
  • நன்கு கொதி வந்ததும் இறக்கவும்.  

குறிப்பு:

இட்லிக்கான சாம்பார்.....சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்...ஆனால் இட்லிக்கு மட்டுமே தனி ருசி...

கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

Sunday, April 15, 2012

கார எண்ணெய் அவரைக்காய்ப் பொரியல்

சைவ விருந்தினர்களுக்கென்று சிறப்பான சமையல் குறிப்புகளுள் இதுவும் ஒன்று.

செய்து பார்த்த பின் தோன்றியது: அவரைக்காயைக்  இப்படிக் காரமாய்ச் செய்ய முடியுமா?

தேவையான பொருட்கள்:

அவரைக்காய்  -200 கிராம்
சின்ன வெங்காயம் - சுமார் 15
தக்காளி - 1
பூண்டு - 2 பற்கள்
மல்லிப்பொடி - 2 மேசைக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
தாளிக்க - கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
  • வாணலியில் தாளிக்கும் அளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் சிறு துண்டாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
  • பின் மீதமிருக்கும் எண்ணெயை வாணலியில் சேர்த்துச் சற்றுச் சூடாக்கவும்.
  • நன்கு வதங்கியதும், மிகவும் பொடியாக நறுக்கிய அவரைக்காயைச் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
  • மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடவும்.
  • அவ்வப்போது கிளறிவிடவும்.
  • அவரைக்காய் நன்கு வெந்ததும், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறவும்.
  • அவரைக்காய் சுருள வரும்வரை வதக்கவும்.

    கற்றுக் கொடுத்தது: திருமதி மாணிக்கவல்லி அழகப்பன், தோழி

    Wednesday, April 11, 2012

    தேங்காய்த் துவையல்

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய்- 3/4 கோப்பை
    தோல் உளுத்தம்பருப்பு- 4 மேசைக்கரண்டி
    மிளகாய் வற்றல் - 10
    புளி - சிறிய எலுமிச்சை அளவில் முக்கால் பாகம்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:
    • வாணலியில் உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
    • பின் மிளகாயும் சேர்த்துச் சிறிது நேரம் வறுத்து இரண்டையும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
    • தேங்காயைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
    • ஊறவைத்த புளியுடன், உப்பு இவை அனைத்தையும் சேர்த்துக் கரகரப்பாகச் சிறிது தண்ணீரும் சேர்த்து அரைக்கவும்.

    குறிப்பு:
    • உதிரியாக வேண்டுமென்றால், தண்ணீர்  விடாமல் அரைக்கவும்.
    • தாளிக்கும் வெங்காய வடகம் பச்சையாக வறுக்காமல் கடைசியில் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றியும் இத்துவையல் அரைப்பதுண்டு.
    • அம்மியில் அரைத்தால் ருசியே தனிதான்..

      கற்றுக் கொடுத்தது: திருமதி பத்மா, அம்மா

    Monday, April 9, 2012

    மட்டன் பிரியாணி - அலுமினியம் ஃபாயில் தம் வைத்தது

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 300 கிராம்
    பிரியாணி அரிசி / பாசுமதி அரிசி / சீரகச் சம்பா அரிசி - 1 1/2 கோப்பை
    பெரிய வெங்காயம் - 2
    சின்ன வெங்காயம் - 4
    பச்சை மிளகாய் - 4
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
    பொடியாக நறுக்கிய் புதினா - 3 கைப்பிடி
    பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 கைப்பிடி
    மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
    மல்லிப்பொடி - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலாப்பொடி - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் பொடி- 1/4 தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி அல்லது எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி
    வெண்ணெய் - 3/4 தேக்கரண்டி
    எண்ணெய் - 4-5 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    பட்டை - 4 துண்டுகள்
    கிராம்பு - 4
    இலை - 3
    அன்னாசி மொக்கு - 1

    மட்டனில் உள்ள கொழுப்பை அகற்றும் முறை:

    நம் ஊரிலாவது கொழுப்பில்லாத கறி வாங்கி விடலாம். ஆனால், இங்கே ரியாத்தில் கொழுப்பில்லாத கறி கிடைப்பது அபூர்வம். அப்படிக் குறைவாகவே கொழுப்பு இருந்தாலும் கூட, அதை நீக்குவது அவசியம் என்பவர்களுக்காக இந்தக் குறிப்பு. மற்றபடி கொழுப்பு தேவைப்பட்டால், அப்படியே கழுவி எடுத்துக் கொள்ளலாம்.
    • கறித்துண்டுகளை நடுத்தர அளவில் துண்டுகளாக்கவும்.
    • 2 மேசைக்கரண்டி கோதுமை மாவு, 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி சுமார் அரை மணி நேரம் வைக்கவும்.
    • பின் கழுவியெடுத்தால் கொழுப்பு தனியாகக் கழன்று வந்து விடும்.



    (கோழியையும் இப்படி மஞ்சள் & மாவால் குளிப்பாட்டி எடுத்தால், கொழுப்பும் கழன்று வரும்; பச்சை வாசமும் மறைந்து போகும்.)

    தாளிக்க &  வதக்க:
    • வாணலியில் வெண்ணெய் சேர்த்து, அது உருக ஆரம்பித்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
    • தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும்.
    • பின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
    • எண்ணெய் பிரிந்து வரும்போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வர வதக்கவும்.
    • நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், சிறு துண்டுகளாக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும், வாணலியைக் கொஞ்சம் நேரம் மூடி வைத்தால் தக்காளி குழைந்து விடும்.
    • பின் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலாப்ப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறவும்
    • எண்ணெய் பிரிந்து வரும்போது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
    • தட்டி வைத்த சின்ன வெங்காயமும் போட்டு வதக்கவும்
      ஒவ்வொரு பொருள் சேர்ப்பதற்கு முன்னும் எண்ணெய் பிரிந்து வருவதுதான் பிரியாணிக்கான முக்கிய குறிப்பு.


      குக்கரில் வேக வைக்கும் முறை:
      • வதக்கிய மசாலாவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும்.
      • ஒரு பகுதியை அப்படியே வைத்துவிட்டு, மறு பகுதியை நீர் வடிகட்டிய மட்டன் துண்டுகளுடன், மட்டனுக்கு மட்டும் தேவைப்படும் உப்பு சேர்த்து, தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, மட்டன் முக்கால் பத வேக்காடு வரும் வரை வேகவைக்கவும்.
      • (பிரியாணி இலைகளை குக்கரில் சேர்க்காமல் தனியே எடுத்து வைத்துள்ள மசாலாவில் சேர்க்கவும்.)
      • வெந்த, குக்கர் ஆவி அடங்கியதும், மட்டன் துண்டுகளைத் தனியே வடிகட்டி எடுக்கவும்.
      • எஞ்சியுள்ள தண்ணீரைச் சரியாக அளந்து கொள்ளவும்.
      அரிசி கழுவி வைக்கும் முறை:
      • அரிசியை நீரில் கழுவி, வடிகட்டி, சுமார் 5 நிமிடங்கள் வைக்கவும்.
      தம் வைக்கும் முறை:
      • அடி கனமான பாத்திரத்தில் (நான் ஸ்டிக் பாத்திரமும் உகந்ததே) 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வடித்து வைத்து அரிசியைச் சுமார் 1 நிமிடம் வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
      • பின் மட்டனில் வடிகட்டிய நீருடன் சேர்த்து 3 கோப்பை நீர் அளந்து பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
      • கொதி நன்கு வந்ததும், அரிசி, வெந்த மட்டன் மற்றும் மீதமிருக்கும் மசாலா சேர்த்துக் கிளறவும்.
      • தேவையான உப்பு சேர்க்கவும்.
      • தயிர் அல்லது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்துக் கிளறவும்.
      • தண்ணீர் பாதியளவு வற்றிவிடும் நிலையில், அலுமினியம் ஃபாயில் போட்டு வைத்து, மூடி கொண்டு மூடி வைக்கவும். (இது எரியும் கரித்துண்டுகள் வைத்திடாத  தம்.)




      • தேவைப்பட்டால் அலுமினியம் ஃபாயிலை எடுத்து, நடுவில் கிளறிப் பின் மறுபடியும் மூடி தம் வைக்கலாம்.
      • சுமார் 7 - 10 நிமிடங்களில் பிரியாணி தயாராகிவிடும்.

      குறிப்பு:

      • ஏலக்காய் வாசனை விரும்புபவர்கள், தாளிக்கையில் சேர்த்துக் கொள்ளலாம்.
      • இதில் கூறப்பட்டுள்ளது மிதமான காரம்; தேவைப்பட்டால் பச்சை மிளகாய் மற்றும் மிளகாய்ப்பொடி இன்னும் சேர்த்துக் கொள்ளலாம்.
      கற்றுக் கொடுத்தது: பலரிடமிருந்து நான் கற்ற, ஒவ்வொருவரிடமும் ஒன்றைப் பின்பற்றிய முஷக்கல் குறிப்பு

      Saturday, March 31, 2012

      எண்ணெய்க் கத்தரிக்காய்க் குழம்பு

      தேவையான பொருட்கள்:

      கத்தரிக்காய் - 8
      வெங்காயம் - 1
      தக்காளி - 1
      பூண்டு - 4 பற்கள்
      சீரகம் - 1/2 தேக்கரண்டி#
      கெட்டியான புளிக்கரைசல் - 1/2 கோப்பை
      மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
      மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
      மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
      துருவிய தேங்காய் 3/4 கோப்பை
      தாளிக்க: கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை
      எண்ணெய் - 1/4 கோப்பை
      உப்பு - தேவையான அளவு

      செய்முறை:

      • கத்தரிக்காய் நுனிகளை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
      • வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
      • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
      • சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
      • பின் மீதமுள்ள எண்ணெய் மொத்தம் சேர்க்கவும்.
      • கத்தரிக்காய்களைச் சேர்த்து, பிரவுன் கலர் நிறம் வரும்வரை வதக்கவும்.
      • புளிக்கரைசலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கி, வாணலியில் ஊற்றி மூடவும்.
      • தேங்காய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
      • கத்தரிக்காய் நன்றாக வெந்ததும், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.
      • ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


      கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

      Tuesday, March 20, 2012

      மேத்தி சிக்கன் ஃப்ராங்க்ஸ் மசாலா

      தேவையான பொருட்கள்:

      சிக்கன் ஃப்ராங்க்ஸ் - 4
      வெங்காயம் - 1
      தக்காளி - 1
      பச்சை மிளகாய் - 2
      வெந்தயக்கீரை  / மேத்தி(காம்புகள் நீக்கியது) - ஒரு கைப்பிடி
      இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
      மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
      மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
      மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
      கரம் மசாலாப்பொடி - 1 தேக்கரண்டி
      தேங்காய் துருவியது - 4 மேசைக்கரண்டி
      உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
      கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
      வெங்காயத்தாள் - அலங்கரிக்க

      செய்முறை:
      • சிக்கன ஃப்ராங்க்ஸ்களைச்சிறு துண்டுகளாக வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு, சிக்கன்ஃப்ராங்க்ஸ் துண்டுகளைக் கொஞ்சம் நிறம் மாறும் வரை வறுத்தெடுத்துத் தனியே வைக்கவும். வறுத்ததும், நன்றாக உப்பி வரும்.


      • எண்ணெய் தேவைப்பட்டால் இன்னும் சிறிது  ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
      • வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
      • சிறுதுண்டுகளாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, பொடியாக  நறுக்கிய மல்லித்தழைசேர்த்து வதக்கவும்.
      • நன்கு வதங்கியதும், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, கரம் மசாலாப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
      • கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
      • மசாலா வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
      • ஒரு சின்ன வாணலியில் / தாளிக்கும் கரண்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெந்தயக்கீரையைச் சற்றே முறுகலாக வறுத்தெடுத்து மசாலாவுடன் சேர்க்கவும். பச்சையாகச் சேர்ப்பதைவிட, வறுத்துச் சேர்த்தால் வெந்தயக்கீரை வாசம் நன்றாக இருக்கும்.
      • சிக்கன் ஃப்ராங்க்ஸ் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

      குறிப்பு:
      • சாதத்துடன் பிசைந்து சாப்பிட, ரசம் / பருப்பு / சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
      • ஃபிராங்க்ஸ்க்குப் பதிலாக சிக்கன் சாஸேஜும் பயன்படுத்தலாம்.
      கற்றுக் கொடுத்தது: சொந்தமா யோசித்து முயற்சித்தது

      Tuesday, March 13, 2012

      காலி ஃப்ளவர் முட்டைப் பொடிமாஸ்

      தேவையான பொருட்கள்:

      காலி ஃப்ளவர் சிறியது - 1
      வெங்காயம் - 2
      பச்சை மிளகாய் - 4
      முட்டை - 2
      மிளகுப்பொடி - 3 தேக்கரண்டி
      உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

      செய்முறை:
      • காலி ஃப்ளவரைப் பொடிப் பொடியாக நறுக்கி, உப்பிட்ட வெந்நீரில் சுமார் 15 நிமிடங்கள் வைக்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
      • பொன்னிறமானதும், நீர் வடிகட்டிய காலி ஃப்ளவர், இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
      • நன்றாகச் சுருண்டு வரும் போது, முட்டைகளை உடைத்து ஊற்றி, அவ்வப்போது கிளறி விடவும்.
      • முட்டை வெந்ததும், மிளகுப் பொடியைத் தூவி இறக்கவும்.

      குறிப்பு:
      • ரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டி சான்ட்விச் - இவற்றுக்குப் பொருத்தமாக இருக்கும்.
      • எண்ணெய் சற்று அதிகம் பயன்படுத்தினால், சுவையும் அதிகமாகும்.
      கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா ராம், தோழி

      Sunday, March 11, 2012

      தக்காளிப் பருப்புப் பச்சடி

      தேவையான பொருட்கள்:

      தக்காளி - 3
      வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கோப்பை
      வெங்காயம் - 1
      பச்சை மிளகாய் - 2
      பூண்டு - 2 பற்கள்
      மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
      சீரகம் - 1/4 தேக்கரண்டி
      தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி
      தாளிக்க - கடுகு,உளுந்து, எண்ணெய், கறிவேப்பிலை
      உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

      செய்முறை:

      • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.
      • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
      • பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
      • சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
      • சுருண்டு வதங்கியபின், வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.
      • மிளகாய்ப்பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைக்கவும்.
      • ஐந்து நிமிடங்கள் கழித்து, விழுதாக அரைத்த தேங்காய் சீரகத்தைச் சேர்க்கவும்.
      • ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


      குறிப்பு:

      • சாதத்தில் பிசைந்து சாப்பிட, சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிட என்று அனைத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.
      • தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.
      கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா

      Saturday, March 3, 2012

      நெய் சாதம்

      தேவையான பொருட்கள்:

      பச்சரிசி / பாசுமதி அரிசி - 1 கோப்பை
      நெய் - 4 மேசைக்கரண்டி
      வெங்காயம் - 1
      பச்சை மிளகாய் - 4
      பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி
      பொடியாக நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
      பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை + புதினா - 1 மேசைக்கரண்டி
      பட்டை- 3 துண்டு
      கிராம்பு - 3
      முந்திரிப் பருப்பு - தேவையான அளவு
      உப்பு - தேவையான அளவு


      செய்முறை:

      • அரிசியைக் கழுவி, தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
      • வாணலியில் நெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
      • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
      • பின் அரிசியைச் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
      • பின் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
      • நன்கு கொதி வந்ததும், அடுப்பின் தீயைக் குறைக்கவும்.
      • சாதம் முக்கால் வேக்காடு பக்குவத்துக்கு வந்த பின், புதினா கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும்.
      • வறுத்த முந்திரி சேர்த்து, சாதம் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

      குறிப்பு:

      விரும்பினால்,

      • தண்ணீர் அளவைச் சற்றே குறைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
      • ஏலக்காய் தட்டிச் சேர்க்கலாம்
      கற்றுக் கொடுத்தது: திருமதி ஷோபா மோகன், தோழி

      Sunday, February 26, 2012

      பாசிப்பயிறு காரப் பணியாரம்

      தேவையான பொருட்கள்:

      பாசிப்பயிறு - 3/4 கோப்பை
      புளித்த இட்லி / தோசை மாவு - 1 கோப்பை
      பொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு
      பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
      பொடியாக நறுக்கிய தேங்காய் - தேவையான அளவு
      இஞ்சி - ஒரு சிறிய துண்டு
      கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,பெருங்காயம் - தாளிக்க
      எண்ணெய் - தேவையான அளவு
      உப்பு - தேவையான அளவு

      செய்முறை:
      • பாசிப்பயிறைக் கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
      • பாசிப்பயிறுடன் உப்பு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
      • பின் புளித்த இட்லி மாவுடன் உப்பு சேர்த்து அரைத்த பாசிப்பயிறு மாவையும் கலக்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
      • பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
      • தாளித்தவற்றை மாவுடன் நேர்த்து, தேங்காய்த் துன்டுகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
      • அடுப்பில் பணியாரச்சட்டியை வைத்து, பணியாரம் சுட்டு எடுக்கவும்.

      குறிப்பு:

      • மாவு புளிக்கவில்லையென்றால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கலக்கலாம்.
      • காரப்பிரியர்கள் பச்சைமிளகாயை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.

      கற்றுக் கொண்டது:

      பெசரட்டு செய்த போது இதைச் செய்தால் என்ன என்று தோன்றியபோது செய்தது.

      Wednesday, February 22, 2012

      எண்ணெய்க் கத்தரிக்காய் மசாலா

      தேவையான பொருட்கள்:

      கத்தரிக்காய் - 8
      வெங்காயம் - 1
      தக்காளி - 1
      பூண்டு - 4 பற்கள்
      தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
      வறுத்த நிலக்கடலை (தோல் நீக்கியது) - 1/3 கோப்பை
      எள்ளு (வெள்ளை / கறுப்பு) - 3 தேக்கரண்டி
      கொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி
      மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி
      மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
      நீர்த்த புளிக்கரைசல் - 1/4 கோப்பை
      எண்ணெய் - 1/3 கோப்பை
      உப்பு - தேவையான அளவு

      செய்முறை:

      • கத்தரிக்காய்களை காம்பு நீக்கி நீள்வாக்கில் கீறிக்கொள்ளவும்.(பெரிய கத்தரிக்காயாக இருந்தால் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.)
      • எள்ளு, கொத்தமல்லி விதை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
      • இதனுடன் கடலை, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
      • வதக்கிய வெங்காயம், தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

      • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கத்தரிக்காய்களைப் போடவும்.
      • கத்தரிக்காய் நிறம் மாறியதும், பொடியாக நறுக்கிய பூண்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும்.

      • மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

      • கத்தரிக்காய் அதிகம் குழையாமல் பார்த்துக் கொள்ளவும்.
      • மசாலா இறுகி வந்ததும் இறக்கி விடவும்.
      குறிப்பு:

      • க்ரேவி போல வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் முன்னாலேயே எடுத்து விடலாம்.
      • நம் வீட்டிற்காகச் செய்யும் போது எண்ணெய் சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.
      • பிரியாணி, நெய் சாதம், தக்காளி சாதம், சப்பாத்தி இவற்றுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

      கற்றுக் கொடுத்தது: திருமதி. நளினி சதானந்த், தோழி

      Tuesday, February 21, 2012

      தக்காளி ரசம்

      தேவையான பொருட்கள்:

      தக்காளி - 2
      பூண்டு - 3 பற்கள்
      மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
      நீர்த்த புளிக்கரைசல் - 1/2 கோப்பை
      கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு
      உப்பு - தேவையான அளவு
      வேகவைத்த துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி

      பொடிக்க:

      மிளகு - 1 தேக்கரண்டி
      சீரகம் - 1/2 தேக்கரண்டி
      கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
      வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
      காய்ந்த மிளகாய் - 2

      தாளிக்க:

      எண்ணெய்
      கடுகு
      உளுந்து
      சீரகம் - 1/4 தேக்கரண்டி
      வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
      காய்ந்த மிளகாய் - 1
      பெருங்காயம் - 2 சிட்டிகை
      செய்முறை:

      • தக்காளியைச் சுடுதண்ணீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், வெந்தயம் வறுத்துக் கொள்ளவும்.
      • பின் அவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.
      • அதனுடன் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து 2 சுற்று சுற்றவும்.
      • பின் இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, வேகவைத்த துவரம்பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
      • பின் தக்காளிக் கரைசலை வாணலியில் ஊற்றிக் கொதிக்க விடவும்.

      • நன்கு நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, பாத்திரத்தில் எடுத்து ஊற்றவும்.
      • அதிகம் கொதிக்க விடக்கூடாது; நன்கு நுரைத்ததும் இறக்கி விடவும்.

      குறிப்பு:
      • புளியே சேர்க்காமல் இன்னும் 2 தக்காளி அதிகமாய்ச் சேர்த்தும் செய்யலாம்.
      கற்றுக் கொண்டது:  அங்கே இங்கே கேட்டது

      Sunday, February 19, 2012

      கார கோதுமை ரொட்டி

      தேவையான பொருட்கள்:

      கோதுமை மாவு - 1 கோப்பை
      பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கோப்பை
      பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி
      மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
      மல்லிப்பொடி - 1தேக்கரண்டி
      ஓமம் - 1/2 தேக்கரண்டி
      பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
      பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு
      உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

      செய்முறை:
      • ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
      • பின் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து  பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
      • மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

      • ரொட்டிக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
      • உருண்டைகளைச் சுற்றிச் சிறிது எண்ணெய் தடவவும்.
      • ஒவ்வொரு உருண்டையாக எடுத்து நெகிழிப் பைக்குள் (plastic cover) வைத்து ரொட்டி தட்டவும்.


      • அடுப்பில் தோசைக்கல், அல்லது சப்பாத்தி செய்யும் பாத்திரத்தை வைத்து, ரொட்டி சுட்டு எடுக்கவும்.
      • எண்ணெய் தேவையான அளவு ஊற்றி, இரண்டு பக்கமும் புரட்டி எடுக்க, ரொட்டி நன்கு சிவந்து வரும்.


      குறிப்பு:

      • ரொட்டியை மேலும் காரம், மணம் மிக்கதாக மாற்ற உங்களுக்குத் தேவையான பொருட்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
      • வாழையிலையில் வைத்து ரொட்டி தட்டினால் நன்றாக இருக்கும்.. அது கிடைக்காத போது நெகிழிப்பை பயன்படும்.
      • சற்றே மொறு மொறுப்பாக வேண்டுமானால், மாவு பிசையும் போது சிறிது ரவை சேர்த்துக் கொள்ளலாம். 
      கற்றுக் கொடுத்தது: சிநேகிதி புத்தகத்தின் சமையல் இணைப்பு + எனக்குத் தோன்றிய உபரி கருத்துகள்

      Sunday, February 12, 2012

      வறுத்த மிளகுக் கத்தரிக்காய்

      தேவையான பொருட்கள்:

      கத்தரிக்காய் - நடுத்தர அளவு - 6
      சின்ன வெங்காயம் - 8
      பூண்டு - 4 பற்கள்
      துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
      மிளகு - 1 மேசைக்கரண்டி
      கொத்தமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
      சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
      சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
      காய்ந்த மிளகாய் - 2
      மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
      எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
      உப்பு - தேவையான அளவு

      செய்முறை:

      • மிளகு, கொத்தமல்லி விதை, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் -  இவை அனைத்தையும் பொடிக்கவும்.

      • பின் நிறு துண்டுகளாக நறுக்கியவெங்காயம், துருவிய தேங்காய் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

      • ஒவ்வொரு கத்தரிக்கயையும் ஆறு துன்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கத்தரிக்காய், மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

      • சற்றே வதங்கியதும் அரைத்த விழுதுடன் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றிக் கிளறவும்.
      • வாணலியை மூடி வைக்க வேண்டாம்.
      • அவ்வப்போது கிளறி விடவும்.
      • கலவை சற்றே இறுகியதும், கவனமாகக் கிளறவும்.
      • கத்தரிக்காய் குழைந்துவிடக்கூடாது.


      • நன்கு ஈரப்பதம் முழுவதும் வற்றியதும், வாணலியை இறக்கவும்.

      கற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா

      Friday, February 10, 2012

      பருப்புருண்டைக் குழம்பு + பக்கோடா


      தேவையான பொருட்கள்:

      (இருவருக்குத் தேவையான அளவு)

      உருண்டைகள் செய்ய

      துவரம்பருப்பு - 3/4 கோப்பை
      பெரிய வெங்காயம் - 1/ சின்ன வெங்காயம் - 8
      இஞ்சி - 1 சிறிய துண்டு
      பூண்டு - 3 பற்கள்
      பச்சைமிளகாய் - 3
      காய்ந்த மிளகாய் - 2
      சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
      தேங்காய்த் துருவல் - 4 மேசைக்கரண்டி
      கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
      உப்பு - தேவையான அளவு

      குழம்புக்கு அரைக்க

      தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
      சோம்பு - 1/2 மேசைக்கரண்டி

      குழம்புக்குச் வதக்க, சேர்க்க

      தக்காளி பெரியது - 1
      பெரிய வெங்காயம் - 1/ சின்ன வெங்காயம் - 8
      பூண்டு - 3 பற்கள்
      கரம் மசாலப் பொடி - 1 தேக்கரண்டி
      புளிக்கரைசல் - 1/4 கோப்பை
      மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
      மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
      மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
      உப்பு - தேவையான அளவு

      தாளிக்க

      பட்டை - 3 துண்டு
      கிராம்பு - 2
      கடுகு, உளுந்து - தாளிக்க
      கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
      எண்ணெய் - தேவையான அளவு

      செய்முறை:

      உருண்டைகள் செய்யும் முறை
      • துவரம்பருப்பைச் சுமார் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
      • ஒரு வெங்காயம், 3 பூண்டுப் பற்கள், 2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.
      • வாணலியில் எண்ணெய் விட்டுப்   பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,  பூண்டு மூன்றையும் பொன்னிறமாக வதக்கவும்.
      • தண்ணீர் வடிகட்டிய பருப்புடன்,  கரம் மசாலாப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய்த்துருவல் 4 தேக்கரண்டி,காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
      • சிறிய லட்டு அளவில் 6 உருண்டைகள் இறுக்கமாகப் பிடிக்கவும்.
      குழம்பு செய்யும் முறை
      • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து, பட்டை, கிராம்பு, சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
      • நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ஒன்று, 3 பூண்டுப் பற்கள்,  தக்காளி சேர்த்து வதக்கவும்.
      • பின் புளிக்கரைசல், மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
      • பச்சை வாசனை போனது ம்  தேங்காய், சோம்புக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
      • நன்கு நுரைத்து படத்தில் உள்ள பக்குவத்துக்கு வரும்போது அடுப்பின் தீயை மட்டுப்படுத்தி, பிடித்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாக இட்டு, வாணலியை மூடிவைக்கவும்.



      • சற்று நேரம் கழித்து உருண்டகளை மெதுவாகப் புரட்டி விடவும்.
      • உருண்டைகள் வேகச் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் பிடிக்கும்.

      • வாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் உருண்டை பிடித்துபோக மீதமுள்ள கலவையைக் கிள்ளிப் பொரித்தால் பக்கோடா தயார்.
      குறிப்பு: 
      • முழுவதும் துவரம்பருப்பு சேர்க்காமல், பாதி துவரம்பருப்பு, பாதி கடலைப்பருப்பு சேர்க்கலாம்.
      • கவனமாகச் செய்தால் உருண்டை உடையும் வாய்ப்புகள் இல்லை; இருந்தாலும், உடைந்து விடுமோ என்று தோன்றினால் இட்லிப்பானை  ஆவியில் உருண்டைகளை வேகவைத்துச் சேர்க்கலாம்.
      கற்றுக்கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா



      Sunday, February 5, 2012

      கொள்ளுக்கஞ்சி


      தேவையான பொருட்கள்: 

      (2 கோப்பைக்கான அளவு)

      கொள்ளு - 3 மேசைக்கரண்டி
      பாசிப்பருப்பு / பயத்தம்பருப்பு - 3/4 மேசைக்கரண்டி
      பூண்டு - 3 பற்கள்
      தேங்காய்த்துறுவல் - 1 மேசைக்கரண்டி
      உப்பு - தேவையான அளவு

      செய்முறை:


      கொள்ளு



      வறுத்த கொள்ளூ + பாசிப்பருப்பு




      • கொள்ளு, மற்றும் பயத்தம் பருப்பைத் தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் அரைகுறையாகப் பொடி செய்யவும்.




      • பிரஷர் குக்கரில் பொடித்த கொள்ளு + பாசிப்பருப்புடன் 3 கோப்பை தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் வைக்கவும்.
      • கஞ்சி தயாரனதும், தேங்காய்த்துறுவலைச் சேர்த்துக் கொள்ளவும்.



      குறிப்பு:


      • மேலும் சுவைகூட்டப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
      • கொள்ளு, பாசிப்பருப்பு 3:1 என்ற விகிதத்தில் வறுத்துப் பொடித்து டப்பாவில் வைத்துத்  தேவையான போது கஞ்சி  வைத்துக்கொள்ளலாம்.

      அங்கே இங்கே கேட்ட குறிப்புகளை வைத்து நான் முயற்சித்தது